சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள கட்டிக்குளம் கருப்பனேந்தல் மடத்தில், திருக்கூடலை நவநீத பெருமாள் எழுந்தருளும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
கட்டிக்குளம் சித்தர் குட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளால் திருப்பரங்குன்றம் திருக்கூடலை இராமலிங்க விலாசத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட நவநீத பெருமாள் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, கடந்த ஜூலை 29-ஆம் தேதி ஆடி பௌர்ணமி தினத்தில் திருக்கூடலையிலிருந்து நவநீத பெருமாள் பல்லக்கில் புறப்பாடு நடைபெற்றது.

மதுரை, ஆரப்பாளையம், கோரிப்பாளையம், வண்டியூர், திருப்புவனம், திருப்பாச்சேத்தி, முத்தனேந்தல், மானாமதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் மற்றும் கிராமங்கள் வழியாக பல்லக்கு வலம் வந்து, மாயாண்டி சுவாமிகளின் அவதார இல்லம் மற்றும் கருப்பனேந்தல் மடத்தில் அமைந்துள்ள தவச்சாலை முன்பு எழுந்தருளியது.
இதையடுத்து, மடம் சார்பில் நவநீத பெருமாளுக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து மாயாண்டி சுவாமிகளுக்கும், குட்டுக்கோலுக்கும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நிறைவாக, நவநீத பெருமாள் எழுந்தருளிய பல்லக்கு தவச்சாலையை வலம் வந்து புறப்பட்டது. பக்தர்கள் சுவாமியை வழிபட்டு வழியனுப்பி வைத்தனர்.












